சென்னை: வரும் 23-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை ஐந்து மணி வரை கோவையில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கான இலவச பயிற்சி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: "தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக தொழில் பயிற்சிகள் மற்றும் தொழில் தொடங்க அனைத்து உதவிகளும் சேவை மனப்பான்மையுடன் அனைத்து மாவட்டங்களிலும் செய்து வருகிறது. வரும் சனிக்கிழமை செப்டம்பர் 23-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஹிந்துஸ்தான் காலேஜ் டிபார்ட்மென்ட் ஆஃப் சோசியல் வொர்க் உடன் இணைந்து இந்துஸ்தான் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி அரங்கத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட பெண்களுக்காக கருத்தரங்கம் மற்றும் கைத்தொழில் பயிற்சி லோன் மேளா ஆகியவை நடைபெற உள்ளன.
இந்த கருத்தரங்கத்தில் மத்திய மாநில அரசின் திட்டங்கள், உதயம் தொழில் பதிவு விபரங்கள் மற்றும் சிறந்த மகளிர் தொழில் முனைவோருக்கான விருதுகள், தொழில் தொடங்க தேவைப்படும் விரைவான கடன் வசதி மற்றும் அவர்கள் உற்பத்தி செய்துள்ள பொருட்களைக் கொண்ட விற்பனைக்கூடங்கள், போன்றவை நடைபெற உள்ளன.
இத்துடன் மகளிருக்கு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நான்கு கைத்தொழில் பயிற்சிகளும் கைதேர்ந்த வல்லுநர்களால் கற்றுத் தரப்பட உள்ளன. ஹெர்பல் நாப்கின், ஹெர்பல் சோப், கிளீனிங் ஜெல், ஃப்ரூட்ஸ் ஸ்குவாஷ் போன்றவை கற்றுத் தரப்பட உள்ளன. இதற்கு மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும்? மார்க்கெட் எவ்வாறு செய்ய வேண்டும்? எவ்வாறு இதற்கு பதிவு செய்ய வேண்டும்? என்ற விபரங்களும் பயிற்சியில் வழங்கப்பட உள்ளன.
» மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்க நீட் தேர்வு உதவவில்லை: அன்புமணி
» சாலைகள் சரியில்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்! - முதல்வர் ஸ்டாலின்
இந்த நிகழ்வுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. ஆனால் முன்பதிவு அவசியம். இதில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவுக்கு குறுந்தகவல் செய்ய வேண்டிய எண்கள் 9361086551 / 7871702700. மேலும் சங்கத்தின் மூலமாக உறுப்பினராகி பயன்கள் பெற விரும்பினால், உங்களது ஆண்ட்ராய்டு போனில் form.wewatn.com ல்பதிவு செய்து கொள்ளலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.