அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி நீக்கம்: மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜே பைடன் பங்கேற்கும் நிலையில் அந்த நாட்டிலிருந்து தருவிக்கப்படும் சில பொருட்கள் மீதான கூடுதல் வரியை நீக்குவதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் செப்.5 அன்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

கொண்டைக்கடலை, பருப்பு (மசூர்), ஆப்பிள், வால்நட் மற்றும் பாதாம் உள்ளிட்ட அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்களின் மீதான வரியை அமெரிக்கா அதிகரிக்க முடிவு செய்தது. அதற்கு பதிலடி தரும் விதமாக, கொண்டைக் கடலை, பருப்பு, ஆப்பிள் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட அமெரிக்கதயாரிப்புகளின் மீது கூடுதல்வரியை இந்தியா அமல்படுத்தியது. இந்நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் விண்வெளி உட்பட பல்வேறு துறைகளில் இணக்கம் ஏற்படும் வகையில் இந்த கூடுதல் வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்த போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கொண்டைக் கடலை (10 சதவீதம்), பருப்பு (20 சதவீதம்), உலர்ந்த பாதாம் பருப்பு (கிலோவுக்கு ரூ.7), பாதாம் பருப்பு (கிலோவுக்கு ரூ.20), வால்நட் (20 சதவீதம்), ஆப்பிள் (20 சதவீதம்) ஆகியற்றின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகப் பெரிய, நெருங்கிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது. கடந்த 2021-22-ம் ஆண்டு இருதரப்பு இடையிலான வர்த்தகம் முந்தைய ஆண்டின் அளவான 11,950 கோடி டாலரில் இருந்து 12,880 கோடி டாலராக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE