யுபிஐ மூலம் பயனர்கள் கடன் பெறலாம்: ரிசர்வ் வங்கி அனுமதி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியாவில் யுபிஐ மூலம் Pre-sanctioned Credit Lines/Loans எனும் கடனை பயனர்கள் பெறுவதற்கான வசதியை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போன்பே, கூகுள்பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பயனர்கள் கடன் பெறலாம்.

இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. கூகுள் பே, போன் பே, அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், நாட்டில் யுபிஐ மற்றும் நுகர்வோர் கடன் சந்தையை மேலும் விரிவு செய்யும் நோக்கில் Pre-sanctioned Credit Lines/Loans எனும் கடனை பயனர்கள் பெற ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கடன் பெற்று யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். வங்கிகள் இந்த முறையின் கீழ் கடன் வழங்க ஆர்பிஐ அனுமதி வழங்கியுள்ளதாக செப். 4-ம் (நேற்று) தேதி வெளியான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு இந்த கடன் சார்ந்த விதிமுறை மற்றும் நிபந்தனைகளை கடன் வழங்கும் நிறுவனங்கள் தெரிவிக்கலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. முக்கியமாக இதற்கான முன் அனுமதியை பயனர்களிடமிருந்து யுபிஐ அமைப்புகள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கிரெடிட் கார்டு பயன்பாடு போல இதன் செயல்பாடு இருக்கும் என தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE