ஆகஸ்டில் ரூ.1.59 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.59 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகம் ஆகும்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் கூறுகையில், “கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.1.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. இவ்வாண்டு ஆகஸ்டில் ஜிஎஸ்டி 11 சதவீதம் அதிகரித்து ரூ.1.59 லட்சம் கோடியாக உள்ளது. இறக்குமதி மூலமான வரிவருவாய் இவ்வாண்டு ஆகஸ்டில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஜிஎஸ்டி மோசடிகளைத் தடுக்க பல்வேறு கண்காணிப்பு வழிமுறைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனால், ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருவதாக மத்திய வருவாய் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “என் ரசீது என் உரிமை” என்ற பெயரில் மக்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதும் இருந்து, ஜிஎஸ்டி இன்வாய்ஸ் கொண்டிருக்கும் 810 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்களில் 10 பேருக்கு தலா ரூ.10 லட்சமும் மீதுமுள்ள 800 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE