தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் தருமபுரியில் செப். 1 வரை தொழிற்கடன் முகாம்

By செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழிற்கடன் முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், ஏற்கெனவே இயங்கி வரும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்தவும், உற்பத்தியை அதிகப்படுத்தவும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், தருமபுரியில் பென்னாகரம் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை அலுவலகத்தில் நேற்று (21-ம் தேதி) முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழிற்கடன் முகாம் நடக்கிறது.

முகாமில், மாநில அரசின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகின்றன. மேலும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் அதன் சலுகைகள் குறித்தும் விளக்கப்படும். தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

அதேபோல, இந்த முகாம் காலத்தில் அளிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய 04342-260866, 260272, 94443 96867, 94443 96809 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE