சென்னை: பங்குச்சந்தையுடன் இணைந்த கடன் பத்திரங்கள் சர்வதேச அளவில் பிரபலமான முதலீட்டு திட்டம் ஆகும். ஆனால், இதில் பெரிய நிறுவனங்கள் மற்றும் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்களுக்காக முதல் முறையாக பங்குச்சந்தையுடன் இணைந்த கடன் பத்திரங்களை (எம்எல்டி) இன்கிரெட் பினான்சியல் சர்வீசஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ‘இன்கிரெட் நிப்டி பேலன்ஸ்டு எம்எல்டி ஆகஸ்ட் 25’ என்ற இந்த திட்டம் இன்கிரெட் மணி தளத்தில் மட்டுமே கிடைக்கும்.
நிப்டி 50 பங்குகளின் வருவாயின் அடிப்படையில் வருவாய் வழங்கும் இந்த திட்டம் முதிர்வடையும் போது, அசல் தொகைக்கு100% பாதுகாப்பு அளிக்கிறது. 2025 ஆக. 31-ல் முதிர்வடையும் இந்த திட்டத்துக்கு குறைந்தபட்ச மாக 14% லாபம் கிடைக்கும்.
இதுகுறித்து இன்கிரெட் குழும நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பூபிந்தர் சிங் கூறும்போது, “இந்த புதிய முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய பங்குச் சந்தை வளர்ச்சியில் சிறு முதலீட்டாளர்களும் பங்கேற்க இந்த எம்எல்டி திட்டம் வழிவகை செய்கிறது. இது அசல் தொகைக்கு பாதுகாப்பு வழங்குவதுடன் குறைந்தபட்ச லாபத்தையும் வழங்கு கிறது” என்றார்.