சென்னை: தமிழகம், புதுச்சேரி வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவு தலைமை இயக்குநராக கடந்த 2021 முதல் பணியாற்றி வந்தவர் சுனில் மாத்தூர். இவர் தற்போது பதவி உயர்வு பெற்று தமிழகம் - புதுச்சேரியின் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் சுனில்மாத்தூர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிலானியில் பிஇ (சிவில்) பட்டம்பெற்ற சுனில் மாத்தூர், 1988-ம்ஆண்டு பிரிவை சேர்ந்த வருவாய்பணி அதிகாரி ஆவார். இவர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள லீ குவான் யூ ஸ்கூல் ஆப் பப்ளிக் பாலிசியில் ‘பொது நிர்வாகவியலில்’ முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
மேலும், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமான வரித்துறையின் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். தொழிலாளர் - வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் இயக்கு நராகவும் பணியாற்றியுள்ளார்.