ரூ.14,903 கோடி உடன் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்ட விரிவாக்கம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரூ.14,903 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்ட விரிவாக்கத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்: சிறப்புத்திறன் முதன்மைத் திட்டத்தின் கீழ் 6.25 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மறுதிறன் மற்றும் மேம்பட்ட திறன் கொண்டவர்களாக மாற்றப்படுவார்கள்.

> தகவல் பாதுகாப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் 2.65 லட்சம் பேருக்குத் தகவல் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

> புதுயுக ஆளுமைக்கான ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாடு (உமாங்) பயன்பாடு / திட்டத்தின் கீழ் உள்ள செயலி /இணையதளம் 540 கூடுதல் சேவைகளுக்குக் கிடைக்கும். 1,700 க்கும் அதிகமான சேவைகள் உமாங்கில் ஏற்கனவே கிடைக்கின்றன.

> தேசிய சூப்பர் கணினி இயக்கத்தின் கீழ் மேலும் 9 சூப்பர் கம்ப்யூட்டர்கள் சேர்க்கப்படும். ஏற்கெனவே 18 சூப்பர் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன.

> செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பல மொழிகளின் மொழிபெயர்ப்பு கருவியான பாஷினி 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். தற்போது 10 மொழிகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.

> 1,787 கல்வி நிறுவனங்களை இணைக்கும் தேசிய அறிவு வலையமைப்பு நவீனமாக்கப்படும்.

> டிஜிலாக்கர் மூலமான டிஜிட்டல் ஆவண சரிபார்ப்பு வசதி இனி எம்.எஸ்.எம்.இ மற்றும் பிற நிறுவனங்களுக்கும் கிடைக்கும்.

> 2 ஆம் மற்றும் 3-ஆம் நிலை நகரங்களில் 1,200 ஸ்டார்ட்-அப்-களுக்கு உதவி அளிக்கப்படும்.

> சுகாதாரம், விவசாயம் மற்றும் மாற்றத்தை ஏற்றுத் தாங்கவல்ல நகரங்கள் குறித்த செயற்கை நுண்ணறிவின் மூன்று சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.

> 12 கோடி கல்லூரி மாணவர்களுக்கு சைபர் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும்.

> கருவிகளை உருவாக்குதல், தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையத்துடன் 200-க்கும் அதிகமான தளங்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட சைபர் பாதுகாப்புத் துறையில் புதிய முன்முயற்சிகள்

> இன்றைய அறிவிப்பு இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும், சேவைகளுக்கான டிஜிட்டல் அணுகலை ஊக்குவிக்கும், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சூழல் அமைப்புக்கு உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE