சென்னை: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவு அதிக வருவாயை ஈட்டியுள்ளது.
கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு நிதிநிலை அறிக்கையின்படி நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,273.44 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் ரூ.1,136.06 கோடியாக இருந்தது. இது 12.09 சதவீத உயர்வாகும்.
கடந்த ஆண்டில் ரூ.176.39 கோடியாக இருந்த வட்டி, தேய்மானம் மற்றும் வரிக்கு முந்தைய லாபம் தற்போது 84.16 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.324.84 கோடியாக உள்ளது.
தேய்மானத்துக்காக ரூ.69.66 கோடி, நிதிச் செலவுக்காக ரூ.55.94 கோடி ஒதுக்கிய பிறகு, நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.200.24 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.92.97 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல ரூ.60.40 கோடியாக இருந்த வரிக்கு பிந்தைய லாபம் தற்போது ரூ.128.66 கோடியாக வளர்ச்சி பெற்றுள்ளது.
நிறுவனத்தின் காகித உற்பத்தி 1,05,499 டன்னாக உள்ளது.இது முந்தைய ஆண்டில் 1,06,584 டன்னாக இருந்தது. காகித அட்டை உற்பத்தி 45,012 டன்னிருந்து 47,704 டன்னாக அதிகரித்துள்ளது. இவ்வாறு டிஎன்பிஎல் வெளியிட்டசெய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.