குறைந்த விலைக்கு தக்காளி விற்கும் நீலகிரி - குந்தா சகோதரர்கள்!

By ஆர்.டி.சிவசங்கர்


மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் குந்தாவில் தக்காளியை கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்து வரும் சகோதரர்கள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இது, குந்தா மக்களுக்கு தாங்கள் செய்யும் சேவை என சகோதரர்கள் பெருமிதமாக தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தக்காளி கிலோ ரூ.150-க்கு மேல் விற்கப்படுகிறது. இந்நிலையில், குந்தா பகுதியை சேர்ந்த விவசாயிகள் ராமன், புட்டசாமி ஆகியோர் தாங்கள் பயிரிட்டு அறுவடை செய்த தக்காளியை கிலோ ரூ.80-க்கு விற்பனைசெய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இது குறித்து விவசாய சகோதரர்கள் கூறியதாவது: விவசாயம் தான் எங்களுக்கு தொழில். இந்த பகுதியில் எல்லோரும் சாகுபடி செய்யும் மலைக் காய்கறிகளைத் தான் நாங்களும் சாகுபடி செய்து வந்தோம். வீட்டுத் தேவைக்காக ஒரு முறை தக்காளி பயிரிட்டோம். நல்ல விளைச்சல் தந்ததால், அடுத்து கொஞ்சம் அதிகமாக தக்காளியை சாகுபடி செய்தோம்.

ஏப்ரல் மாதம் மைசூரில் இருந்து 1,000 தக்காளி நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தோம். அப்போது தக்காளி விலை ரூ.10 தான். கால நிலை மாற்றத்தால் 400 நாற்றுகள் பட்டுப்போயின.‌ 600 நாற்றுகள் உயிர் பிழைத்தன. செடி சாயாமல் இருக்க ரொம்ப சிரமப்பட்டு பந்தல் கட்டி பராமரித்தோம். எங்கள் உழைப்புக்கு இப்போது நல்ல பலன் கிடைத்துவிட்டது.

நீலகிரி மாவட்டத்தில் ரூ.150-க்கு மேல் தக்காளி விற்கும் நிலையில், உள்ளூர் மக்களுக்காக ரூ.80-க்கு தக்காளியை நாங்கள் விற்பனை செய்கிறோம். குந்தா பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை தக்காளி விளைச்சலுக்கு ஏற்றது. மாட்டுச்சாண உரமிட்டு தக்காளியை சாகுபடி செய்தோம். இப்பகுதியில் வன விலங்குகள் தொந்தரவு அதிகம்.

காட்டெருமை, கடமான், கரடி, குரங்குகள் கூட்டம் கூட்டமாக வரும்.வன விலங்குகள் செடிகளை சேதப்படுத்தாமல் இருக்க இரவு, பகலாக காவல் காத்தோம். மேலும் தக்காளி செடிகளை பராமரிக்க நிறைய செலவு ஆனது. தக்காளி ரூ.200-க்கு மேல் விற்றாலும் பரவாயில்லை, எங்களுக்கு கிலோவுக்கு ரூ.80 கிடைத்தால் போதும். ஆயிரம் கிலோவுக்கு மேல் தக்காளி அறுவடை செய்து உள்ளூர் மக்களுக்கு கொடுத்திருக்கிறோம்.

வெளியூரில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்து தக்காளியை அதிக விலைக்கு கேட்டார்கள். உள்ளூர் மக்கள் தேவைக்கே பற்றாக்குறையாக உள்ள நிலையில், வெளியூரில் தக்காளியை விற்க மனமில்லை. இதை குந்தா மக்களுக்கு நாங்கள் செய்யும் சேவையாக கருதுகிறோம், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE