மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தால் விநாயகர் சிலைகள் விலை 100% உயர்வு

By செய்திப்பிரிவு

நாமக்கல்: மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக விநாயகர் சதுர்த்திக்காகத் தயார் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் விலை கடந்தாண்டை விட 100 சதவீதம் உயர்ந்துள்ளது என குமாரபாளையத்தைச் சேர்ந்த வியாபாரி தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் 18-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்தாண்டு விநாயகர் சிலைகளின் விலை உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக குமாரபாளையத்தைச் சேர்ந்த விநாயகர் சிலை விற்பனையாளர் கார்த்தி கூறியதாவது:,விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி குமாரபாளையத்தில் ஏராளமான விநாயகர்கள் சிலைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இச்சிலைகள் விழுப்புரம், பண்ருட்டி, மதுராந்தகம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்து இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டாக கரோனா காரணமாக விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால், பலர் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும், சிலை தயாரிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், சிலை தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

இதனால், தற்போது விநாயகர் சிலைகளின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனையான 5 அடி உயரச் சிலை ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால், விற்பனை பாதிக்குமா? எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE