திண்டுக்கல் மாவட்டத்தில் 3,000 ஹெக்டேரில் பப்பாளி சாகுபடி: வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்

By பி.டி.ரவிச்சந்திரன்


திண்டுக்கல்: போதிய வருவாய் கிடைப்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் இலக்கைவிட அதிகபரப்பில் விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக் கலைத்துறை மூலம் பப்பாளி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப் பட்டுகின்றன. ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவு ஹெக்டேரில் பப்பாளி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இழப்பின்றி நிரந்தர வருவாய் கிடைப்பதாலும், விவசாயிகள் ஆர்வம் காரணமாகவும் பல மடங்கு அதிகமாக 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பப்பாளி சாகுபடி செய்துள்ளனர்.

இது குறித்து தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் கனிமொழி கூறியதாவது: பப்பாளி விவசாயம் 2 ஆண்டுகளில் பலன் தரக்கூடியது. இதில் `ரெட்லேடி ரகம்' அதிக விளைச்சலை தரும். இதில் `ஹைபிரிட்' ரகத்தை விவசாயிகள் அதிகம் பயிரிட்டுள்ளனர். பராமரிப்புச் செலவும் குறைவு தான்.

இழப்பின்றி வருவாய் கிடைப்பதால் பப்பாளி சாகுபடிப் பரப்பை தாங்களாகவே விவசாயிகள் அதிகரித்துக் கொண்டனர். விவசாயிகளுக்குத் தேவையான பப்பாளி நாற்றுகள், ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். விவசாயிகள் சிலர் கூறுகையில், `ரெட்லேடி ஹைபிரிட்' ரகம் மற்ற ரகங்களைவிட அதிக விளைச்சல் தருகிறது.

மரத்தில் பப்பாளி காய்த்துக் குலுங்குகிறது. அளவாக நீர்ப் பாய்ச்சி நோய் தாக்குதல் இல்லாமல் பார்த்துக் கொண்டாலே போதும். அதிக வருவாய் பெறலாம். பப்பாளி பழங்களை அறுவடை செய்து திண்டுக்கல், ஒட்டன்,சத்திரம் மார்க்கெட்டுகளுக்கு அனுப்புகிறோம் மேலும் வெளி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்துக்கும் மொத்தமாக லாரிகளில் அனுப்புகிறோம். ஒரு கிலோ பப்பாளி ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனையாகிறது, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE