புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில், சிவசேனா உறுப்பினர் தைரியஷீல் சம்பாஜிராவ் மானே என்பவரின் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில் வருமாறு:
உணர்வுபூர்வமான ஒரு விவகாரம் குறித்து உறுப்பினர் கேள்வி எழுப்பி உள்ளார். வாராக் கடன் வசூலிப்பு நடவடிக்கையின்போது வங்கிகள் கருணையின்றி நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. எனவே, வாராக் கடன் வசூல் விவகாரத்தில் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் மனிதாபிமானத்துடனும் உணர்வுபூர்வமாகவும் செயல்பட வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிவசேனா உறுப்பினர் சம்பாஜிராவின் மற்றொரு கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் பாகவத் கிஷன்ராவ் கராட் பதில் அளித்துள்ளார். அதில், “ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு வாரியம் உள்ளது. வட்டி, கூட்டு வட்டி தொடர்பாக, சம்பந்தப்பட்ட வங்கியின் உயர் அதிகாரிகளும் அதன் வாரியக் குழுவும் அவ்வப்போது கூடி முடிவு செய்யும். இதில் மத்திய அரசு தலையிடாது” என்றார்.