2022-23 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டியை 8.15% ஆக உயர்த்தி வழங்க மத்திய அரசு ஒப்புதல்

By செய்திப்பிரிவு

மும்பை: 2022-23 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டியை 8.15% ஆக உயர்த்தி வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் இருந்து இதன் பயனை சந்தாதரர்கள் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ பிஎஃப் வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்தது. அதன்படி EPFO 2022-2023-ஆம் ஆண்டுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை நிர்ணயித்தது. இந்நிலையில், இந்த உயர்வுக்கு நிதி அமைச்சகம் இசைவு தெரிவித்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இதனை ஒட்டி கள அதிகாரிகள் பிஎஃப்தாரர்களின் கணக்குகளில் 8.15 சதவீத கணக்கில் வட்டியை வரவு வைக்குமாறு இபிஎஃப்ஓ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் மூலம் 7 கோடி பேர் பயனடைவார்கள் எனத் தெரிகிறது.

வரலாறு காணாத சரிவும் மீட்சியும்: கரோனா பெருந்தொற்றின் எதிரொலியாக கடந்த மார்ச் 2022ல், 2021-2022 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் மீதான வட்டி 8.10% ஆக குறைக்கப்பட்டது. பல தசம ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பி.எஃப் திட்டத்துக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த அளவு வட்டி என்ற பேரதிர்ச்சியாக அந்த அறிவிப்பு அமைந்தது.

இதையடுத்து, கடந்த 2023 மார்ச் மாதத்தில், டெல்லியில் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டத்தில் இபிஎஃப்ஒ, 2022-23-ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சிபிடியின் முடிவுக்குப் பின்னர், 2022-23-ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகித உயர்வு நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய வட்டி விகிதத்துக்கு நிதியமைச்சகம் மூலமாக அரசின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற சூழலில், இபிஎஃப்ஒ புதிய வட்டி விகிதத்தை வழங்கும்படி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆகஸ்டு மாதம் முதல் இதற்கான பலன் சந்தாதரர்கள் கணக்கில் கிட்டும் என்றும் கூறப்படுகிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பிஎஃப் வட்டி விகிதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE