குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை சார்பில் சர்வதேச வர்த்தக நிதி சேவை தளம்

By செய்திப்பிரிவு

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் சர்வதேச வர்த்தக நிதி சேவைகள் தளம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் ‘ஃபேம்டிஎன்’ மற்றும் ‘ரிசிவபிள்ஸ் எக்ஸ்சேன்ஜ் ஆஃப் இந்தியா’ (ஆர்எக்ஸ்ஐஎல்) நிறுவனம் இயங்குகிறது. இதன்துணை நிறுவனமான ‘ஆர்எக்ஸ்ஐஎல் குளோபல் ஐஎஃப்எஸ்சி’ உடன் இணைந்து தமிழகத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தேவையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக ‘சர்வதேச வர்த்தக நிதி சேவைகள் ஐஎஃப்எஸ்சி’ தளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சியில், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜிதாமஸ் வைத்யன் மற்றும் ஆர்எக்ஸ்ஐஎல் குளோபல் நிறுவனத்தின் இயக்குநர் கேதன் கெய்க்வாட் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த தளத்தில் நிதிபரிவர்த்தனைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளுக்கான, பல்வேறு நிதி வசதிகளை இதன் வாயிலாகப் பெறமுடியும். வர்த்தக வரவுகளை ரொக்க நிதியாக மாற்றுவதற்கும், குறுகிய கால நிதியைப் பெறுவதற்கும் இந்த சர்வதேச நிதி சேவை தளம் உதவியாக இருக்கும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE