நியூயார்க்: ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் நேற்று ஒரே நாளில் சுமார் 20.3 பில்லியன் டாலர்களை தனது சொத்து மதிப்பில் இழந்துள்ளார்.
டெஸ்லா, ட்விட்டர், ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் போன்ற நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார் 52 வயதான மஸ்க். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 234 பில்லியன் டாலர்கள். அதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார். இருந்தும் நேற்று ஒருநாள் மட்டுமே சுமார் 20.3 பில்லியன் டாலர்களை தனது சொத்து மதிப்பில் அவர் இழந்துள்ளார்.
டெஸ்லா பங்குகளின் விலையில் வீழ்ச்சி நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்டது. அந்நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு 9.7 சதவீதம் என்ற அடிப்படையில் சரிந்தது. அதனால் ஒரே நாளில் 20 பில்லியன் டாலர்களை மஸ்க் இழந்துள்ளார். அதன் காரணமாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள மஸ்க் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் இடையே வெறும் 33 பில்லியன் டாலர்கள் தான் வித்தியாசம் உள்ளது. பெர்னார்ட் அர்னால்ட், தற்போது 201 பில்லியன் டாலர்களை தனது சொத்து மதிப்பாக கொண்டுள்ளார்.
ஜெஃப் பெஸோஸ், பில் கேட்ஸ், லேரி எல்லிசன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 99.5 பில்லியன் டாலர்களுடன் உலக பணக்காரர்களில் பட்டியலில் தற்போது 11-வது இடத்தில் உள்ளார். கவுதம் அதானி இந்தப் பட்டியலில் 22-வது இடத்தில் உள்ளார்.