தொடரும் புதிய உச்சம்: சென்செக்ஸ் 67,000 கடந்தது

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை மீண்டும் புதிய உச்சத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 302 புள்ளிகள் (0.45 சதவீதம்) உயர்வடைந்து 67,097 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 83 புள்ளிகள் (0.42 சதவீதம்) உயர்ந்து 19,833 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் புதிய ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 248.89 புள்ளிகள் உயர்வடைந்து 67,044.03 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 76.90 புள்ளிகள் உயர்ந்து 19,826.15 ஆக இருந்தது.

புதிய உச்சத்தில் தொடங்கிய போதிலும் வரம்புக்கு உட்பட்டே பங்குச்சந்தைகள் பயணித்தன. வலுவான காலாண்டு அறிக்கைகள், ரிலையன்ஸ், வங்கி மற்றும் ஊடக பங்குகளின் கடைசி நேர ஏற்றத்தால் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் தொடர்ந்து ஐந்தாவது நாளாக லாபத்தில் நிறைவடைந்தன. வர்த்தக நேரத்தின்போது சென்செக்ஸ் 67,171 ஆகவும் நிஃப்டி 19,852 ஆகவும் உயர்வடைந்திருந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 302.30 புள்ளிகள் உயர்வடைந்து 67,097.44 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 83.90 புள்ளிகள் உயர்ந்து 19,833.20 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், கோடாக் மகேந்திரா பேங்க், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், எம் அண்ட் எம், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன் கம்பெனி பங்குகள் உயர்வடைந்திருந்தன.

டிசிஎஸ், பாரதி ஏர்டெல், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ பேங்க், டெக் மகேந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், இன்போசிஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE