சகாரா குழும கூட்டுறவு சங்கங்களின் முதலீட்டாளருக்கு பணம் வழங்க இணையதளம்: மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சகாரா குழும கூட்டுறவு சங்கங்களில் முதலீடு செய்தவர்களுக்கு, பணத்தை திரும்பிச் செலுத்த தனி இணையதளத்தை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.

சகாரா குழும கூட்டுறவு சங்கத்தில் சகாரா கடன் கூட்டுறவு சங்கம், சகாராயன் யுனிவர்சல் பல்நோக்கு சங்கம், ஹூமாரா இந்தியா கடன் கூட்டுறவு சங்கம், ஸ்டார்ஸ் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் ஆகியவை உள்ளன. இந்த கூட்டுறவு சங்கங்களில் சுமார் 2.5 கோடி பேர் ரூ.30,000 கோடி வரை பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு வர வேண்டிய பணத்தை கொடுக்க சகாரா - செபி ரீஃபண்ட் கணக்கில் இருந்து ரூ,5,000 கோடியை வழங்க உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இதற்காக ‘சிஆர்சிஎஸ்- சகாரா ரீஃபண்ட்’ என்ற பெயரில் இணையதளம் ஒன்றை மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் சகாரா குழுமத்தின் 4 கூட்டுறவு சங்கங்களில் முதலீட்டாளர்களுக்கு சேர வேண்டிய பணம் 45 நாட்களில் திரும்ப கிடைக்கும். இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:

சகாரா ரீஃபண்ட் இணையதளம் தொடங்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை. பல அரசு முகமைகள் ஈடுபட்டுள்ள அமைப்பில் இருந்து பணம் டெபாசிட் செய்தவர்கள் ரீஃபண்ட் தொகையை பெறுவது இதுவே முதல்முறை. இந்த இணையதளத்தில் பதிவு செய்தபின் டெபாசிட் தாரர்கள் 45 நாட்களில் ரீஃபண்ட் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. சகாரா குழும கூட்டுறவு சங்கங்களில் முதலீடு செய்தவர், தங்களுக்குரிய பணத்தை பெறுவதற்காக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 1.7 கோடி முதலீட்டாளர்களுக்குரிய பணம் திருப்பித் தரப்படும். முதல்கட்டமாக முதலீட்டாளர்களுக்கு ரூ.10,000 வரை ரீஃபண்ட் வழங்கப்படும். அதன்பின் கூடுதலாக முதலீடு செய்தவர்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்படும். ரூ.5,000 கோடி பயன்படுத்தியவுடன், உச்ச நீதிமன்றத்தை அணுகி கூடுதல் நிதி விடுக்க வேண்டுகோள் விடுப்போம். அதன்பின் அதிக தொகை முதலீடு செய்தவர்களுக்கு மொத்த ரீஃபண்ட் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE