சென்னை: தமிழகத்தில் வணிக ஏற்றுமதிக்கான நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக விரைவில் மேலும் 20 அஞ்சலக ஏற்றுமதி மையங்கள் தொடங்கப்பட உள்ளன எனத் தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் ஜே.சாருகேசி தெரிவித்துள்ளார்.
இந்திய அஞ்சல் துறை, அயல்நாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் அலுவலகம், இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஃபியோ) இணைந்து, மின் வணிக ஏற்றுமதி மற்றும் அஞ்சலக ஏற்றுமதி மையம் குறித்த கருத்தரங்கத்தை சென்னையில் நேற்று நடத்தின.
அஞ்சல் துறைத் தலைவர் (மெயில் மற்றும் வர்த்தக வளர்ச்சி) பி.பி.தேவி வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கில் தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் ஜே.சாருகேசி பேசியதாவது:
அஞ்சல் துறை மூலம் வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி கடந்த2018-ம் ஆண்டு இந்திய அஞ்சல்துறைக்குக் கிடைத்தது. தொடக்கத்தில் ஏற்றுமதியாளர்கள் சர்வதேச அஞ்சல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஏற்றுமதிக்குத் தேவையான ஆவணங்களை கையால் தயாரித்து அளிக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில், 2022-ம் ஆண்டுமின்னணு முறையில் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கான ‘தர் கர் நிர்யத் கேந்திரா’ என்றஇணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், ஏற்றுமதியாளர்கள் தங்கள் அலுவலகம், வீட்டில் இருந்தவாறே ஏற்றுமதிக்கான அஞ்சல் பில்களை பெற முடிந்தது.
தமிழகத்தில் வணிக ஏற்றுமதிக்கான நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக தற்போது 34 அஞ்சலக ஏற்றுமதி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் மேலும் 20 மையங்கள் தொடங்கப்பட உள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது ஆவணங்களைத் தயாரிப்பதும், சுங்கத் துறை அனுமதி பெறுவதும் மிகவும் கடினமாக இருந்தது.
இனி இந்த அஞ்சலக ஏற்றுமதிமையங்கள் சிறு, குறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும். இதற்காக, பயிற்சி பெற்ற ஊழியர்கள் இந்த மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த மையத்தில் ‘ஒன் ஸ்டாப் கவுன்ட்டர்’ என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏற்றுமதி பொருட்களை புக்கிங் செய்தல், பேக்கிங் செய்தல், அதிகளவு பொருட்களை உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து பெற்றுக் கொண்டு வருதல் ஆகிய சேவைகள் வழங்கப்படும். அத்துடன், ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு, புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்,குறிப்பாக, சிறு தொழில்முனைவோர் மற்றும் கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்ய இந்த மையம் உதவும்.
கடந்த 2022-23-ம் நிதியாண்டில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சர்வதேச அஞ்சல் சேவை வருவாய்29 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார். மெப்ஸ் வளர்ச்சி ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.