சென்செக்ஸ் 529 புள்ளிகள் உயர்ந்து 66,500-ஐ கடந்தது!

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை மீண்டும் புதிய உச்சத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 529 புள்ளிகள் (0.80 சதவீதம்) உயர்வடைந்து 66,589 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 146 புள்ளிகள் (0.75 சதவீதம்) உயர்ந்து 19,711 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இந்த வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் தொடக்கத்தில் அதன் புதிய உச்சத்தை அடைந்திருந்தது. வர்த்தக நேரத்தின் போது ஏற்ற இறக்கமின்றி தட்டையாக மாறிய பங்குச்சந்தை தகவல் தொழில்நுட்ப பங்குகளின் வாங்குதல்களால் மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது. காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 213.42 புள்ளிகள் உயர்வடைந்து 66,274.32 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 41.35 புள்ளிகள் உயர்ந்து 19,605.85 ஆக இருந்தது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், வங்கிப்பங்குகள், தகவல் தொழில்நுட்ப பங்குகளின் ஏற்றம், தடையில்லாத வெளிநாட்டு நிதி வருகை போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய உச்சத்தில் நிறைவடைந்தது. இன்ட்ரா வர்த்தகத்தின்போது, சென்செக்ஸ் 66,656.21 ஆகவும், நிஃப்டி 19,731.85 ஆகவும் இதுவரை இல்லாத அளவில் உச்சமடைந்திருந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 529.03 புள்ளிகள் உயர்வடைந்து 66,589.93 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 146.95 புள்ளிகள் உயர்ந்து 19,711.45 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், டெக் மகேந்திரா பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், மாருதி சுசூகி, ஏசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டாடா ஸ்டீல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வடைந்திருந்தது.

டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, எம் அண்ட் எம், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டிசிஎஸ், என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், இன்போசிஸ், எல் அண்ட் டி, ஐடிசி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE