ஆன்லைன் விளையாட்டுக்கு 28% ஜிஎஸ்டி - மத்திய அரசுக்கு வரியாக ரூ.20,000 கோடி கிடைக்கும்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு இதுவரையில் 18 சதவீதமும் குதிரைப் பந்தயம் மற்றும் கேசினாவுக்கு 28 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்தது.

இந்நிறுவனங்களின் மொத்த வருவாய்க்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதா அல்லது விளையாட்டுகளை ஒருங்கிணைக்கும் தளங்கள் வசூலிக்கும் கட்டணத்துக்கு அல்லது இவ்விளையாட்டுகள் மீது கட்டப்படும் பந்தயத் தொகைக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதா என்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழுவில் மாறுபட்ட கருத்துகள் நிலவியது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ, குதிரைப் பந்தயம் ஆகிய மூன்றுக்கும் அதன் பந்தயத் தொகையின் முழு மதிப்புக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், “இதுவரையில் ஆன்லைன் கேமிங் துறை 18 சதவீதஜிஎஸ்டி வரம்புக்குள் இருந்துகொண்டு, வெறும் 2-3 சதவீதம் அளவிலேயே வரி செலுத்தி வந்தது. உணவுப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5 சதவீத ஜிஎஸ்டியைவிட அது குறைவானது.

கடந்த ஆண்டு ரூ.1,700 கோடி: கடந்த ஆண்டில் ஆன்லைன் கேமிங் துறை மூலம் ரூ.1,700 கோடி அளவிலேயே ஜிஎஸ்டி வசூலானது. தற்போது ஆன்லைன் விளையாட்டுகளின் பந்தயத் தொகைக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வரிவருவாய் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE