உயர உயர பறக்குது காய்கறி, மளிகை பொருள் விலை - ஜூன் Vs ஜூலை பட்டியல்

By இல.ராஜகோபால்

கோவை: மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் சில மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி விலையை கேட்டாலே நெஞ்சு வலி வரும் அளவுக்கு பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.

மனிதர்களின் அடிப்படை தேவைகளில் முதலிடத்தில் உணவு உள்ளது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உணவு வகைகளை தயாரிக்க தேவைப்படும் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியல் ஒப்பிட்டு பார்த்தால் அதன் தாக்கம் தெரியவரும். கோவை மொத்த மளிகை பொருட்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்களின் விலை ஒரு மாதத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது. இவற்றில் சீரகம் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் 460 ரூபாய் விலை அதிகரித்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் ஆர்எஸ்.கணேசன் கூறும்போது, ‘‘மளிகை பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. குறிப்பாக சோம்பு, கிராம்பு, சீரகம் விலை மிகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. இத்தகைய பொருட்கள் பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன.

அறுவடை நேரத்தில் மழை பெய்த காரணத்தால் பொருட்கள் சேதமடைந்து வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். மொத்த மார்க்கெட்டை விட சில்லரை மார்க்கெட்டில் மேலும் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும். விலை உயர்வால் மக்கள் வாங்கும் அளவை குறைந்துள்ளனர். இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் என்பதால் இவற்றை வாங்குவதை தவிர்க்க முடியாது. எனவே மிகுந்த சிரமமப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகம்: கோவை காய்கறி மொத்த மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தக்காளி விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. 15 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.20-க்கு விற்பனையான தக்காளி தற்போது கிலோ ரூ.120-ஐ எட்டியுள்ளது. இதனால், பல உணவகங்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் போன்றவற்றை தவிர்த்து வருகின்றனர்.

தக்காளி (ஆப்பிள்) ஒரு கிலோ ரூ.120, நாட்டு தக்காளி (பெரியது) ரூ.100, நாட்டு தக்காளி(சிறியது) ரூ. 90 ஆகிய விலைகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர பல்வேறு காய்கறி பொருட்கள் விலை கடந்த ஒரு மாதத்தில் ரூ.20 அதிகரித்து காணப்படுகின்றன. அவரைக்காய், தட்டக்காய், கேரட் உள்ளிட்டவை ரூ.40-லிருந்து ரூ.60-ஆக அதிகரித்துள்ளன. பீட்ரூட் ரூ.50, கொத்தவரங்காய் ரூ.40, புடலை, பீர்கங்காய், சுரைக்காய், பாகற்காய் ரூ.30, பீன்ஸ் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெரியகடைவீதி, தியாகி குமரன் மார்க்கெட் சிறு வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜலேந்திரன் கூறும்போது, ‘‘தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை திண்டாட செய்துள்ளது. காளம்பாளையம், பூலுவபட்டி, மதுக்கரை மார்க்கெட், வேலந்தாவளம், மேட்டுப்பாளையம் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தான் பெரும்பாலும் தக்காளி கொண்டு வரப்படுகிறது. மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது. சில்லரை மார்க்கெட்டில் மேலும் விலை அதிகரித்து காணப்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்,’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE