புதுடெல்லி: மின்சார வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக கடந்த ஜூன் மாதத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
நாட்டில் மின்சார வாகன போக்குவரத்தினை ஊக்குவிக்கும் விதமாக "இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்பு மற்றும் துரிதமாக அவற்றை ஏற்றுக் கொள்ளுதல்-பேம் இந்தியா" திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த மானியத் தொகை கடந்த ஜூன் 1, 2023 அன்று, 40 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஒரு கேடபிள்யூஹெச் பேட்டரிக்கான அதிகபட்ச மானியம் ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டது. பேம் திட்டத்துக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த திட்டத்தால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், மானியம் குறைக்கப்பட்டதால் ஓலா, டிவிஎஸ், ஏத்தர் போன்ற நிறுவனங்கள் தங்களது மின்சார ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. இது வாகன விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூன் மாதத்தில் நாட்டில் உள்ள அனைத்து ஐந்து முக்கிய எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது வாகன் புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
ஓலா நிறுவனத்தின் மின் வாகன விற்பனை 38.62%, டிவிஎஸ் மோட்டார் இ-பைக் விற்பனை 61.80 சதவீதம், ஏத்தர் எனர்ஜி இ-பைக் விற்பனை 70.51 சதவீதம் சரிவடைந்து, பஜாஜ் ஆட்டோ இ-பைக் விற்பனை 70.24 சதவீதம் சரிந்துள்ளது.