சென்னை: பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க 6-வது மாநில மாநாடு வரும் 22-ம் தேதி காலை 9:30 மணிக்கும், 41-வது பொதுக்குழுக் கூட்டம் அதேநாளில் பிற்பகல் 2:30 மணிக்கும் மதுரை, வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் க.ப.முரளி விழாவுக்கு தலைமையேற்பார்கள். இந்திய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது
விநியோகத் துறை செயலாளர் ரோகித் குமார் சிங் மாநாட்டை தொடங்கி வைத்து பேருரையாற்றுகிறார்.
தமிழ்நாடு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் டி.ஜெகந்நாதன் புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் (எடையளவுகட்டுப்பாடு) ஏ.கே.சர்மா பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கான உயர்கல்விக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இவ்விழாவில் நாடு தழுவிய பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கங்களின் மாநில தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் மு.ஹைதர் அலி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.