மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 138 புள்ளிகள் உயர்வடைந்து 63,522 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி42 புள்ளிகள் உயர்ந்து 18,869 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் அதன் உச்சபட்ச ஏற்றத்துக்கு மிக நெருக்கமாக தொடங்கின.என்றாலும் வர்த்தகத்தின் போது சரிவில் பயணிக்கத் தொடங்கியது. காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 11.81 புள்ளிகள் சரிவடைந்து 63,372.77 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13.50 புள்ளிகள் சரிந்து 18,812.50 ஆக இருந்தது.
உலகளவில் நிலவிய சாதகமான சூழ்நிலை, உள்நாட்டுச் சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதன் முந்தை உச்சகட்ட உயர்வுக்கு (கடந்த 2022 டிசம்பரில் சென்செக்ஸ் 63,583, நிஃப்டி 18,887 ஆக உயர்ந்திருந்தன) மிக நெருக்கத்தில் இன்றைய வர்த்தகத்தை தொடங்கின. இருந்தபோதிலும் வர்த்தக நேரத்தின் போது அதன் லாபத்தை தக்கவைக்க மிகவும் போராடியது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், நெஸ்ட்லே இந்தியா, டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் பங்குகள் உயர்வில் இருந்தன. ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், என்டிபிசி, கோடாக் மகேந்திரா பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, டெக் மேந்திரா, பாரதி ஏர்டெல், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், இன்போசிஸ், மாருதி சுசூகி பங்குகள் சரிவில் இருந்தன.