புதுடெல்லி: மஹிந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் (எம்டிஎஸ்) இந்தியா பாதுகாப்பு படைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கியுள்ள ஆர்மர்டு லைட் ஸ்பெஷலிஸ்ட் வாகனமான (ஏ.எல்.எஸ்.வி) “ ஆர்மடோ" கவச வாகனத்தை டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
எம்டிஎஸ் என்பது மஹிந்திரா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ நமது ஆயுதப் படைக்கு தேவையான கவச வாகனமான ஆர்மடோ உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டது என்ற பெருமையை கொண்டது. அதன் விநியோகத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, மஹிந்திரா டிஃபென்ஸ் தலைவர் எஸ்.பி.சுக்லா, சுக்வீந்தர் ஹேயர் மற்றும் அவர்களது குழவினருக்கு வாழ்த்துகள். பொறுமை, விடாமுயற்சி மற்றும் ஆர்வத்தின் மூலம் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.