புதுடெல்லி: வங்கிகளின் வாராக் கடன் சிக்கலைத் தீர்ப்பதற்கு சமீபத்தில் ரிசர்வ் வங்கி புதிய நடைமுறையை அறிவித்தது. அதன்படி, கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் நிறுவனத்துடன் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி கடன்களை வரைமுறைக்கு உட்பட்டு தள்ளுபடி செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது.
இந்நிலையில், இந்த நடைமுறை வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்பவர்களுக்கு வாய்ப்பாக அமையும் என்றும் வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் என்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கமும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையில், “வங்கி என்ற அமைப்பில் முக்கிய அங்கமாக இருக்கும் நாங்கள், வங்கியில் கடன் பெற்று மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சமரச வழிமுறையானது, வங்கி மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும். வங்கியில் கடன் பெற்று முறையாக திருப்பிச் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தரும். தவிர, மோசடியாளர்கள் தொடர்ந்து மோசடி செய்வதற்கு ஊக்கம் அளிக்கக் கூடியதாக அமையும்.
வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில், தீவிர கட்டுப்பாடுகள் இருந்தால்தான், கடன் பெற்றவர்கள் முறையாக செயல்படுவார்கள். அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டு அவர்களின் கடனை தள்ளுபடி செய்வது தவறான முன்னுதாரணமாக அமையும். எனவே, ரிசர்வ் வங்கி இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.