புதுடெல்லி: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் உள்ள நாடுகளில், உலக அளவில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது என குறிப்பிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதன் காரணமாக 100 யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகி இருப்பதாகக் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை சுட்டிக்காட்டி, 9 ஆண்டு கால சாதனைகள் குறித்த தகவல்களை அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த செப்டம்பர் 2017 முதல் பிப்ரவரி 2023 வரையிலான காலகட்டத்தில் தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தில் 6.35 கோடி பேர் இணைந்துள்ளனர். 2014-2019 காலகட்டத்தில் 6.24 கோடி வேலைவாய்ப்புகள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
2017-2023ல் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் 6.76 கோடி பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். பிரதமரின் அரசுத் துறை வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 1.21 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 1.12 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
திறன் இந்தியா திட்டத்தின் கீழ் 2.83 கோடி இளைஞர்கள் திறன் மேம்பாடு அடைந்துள்ளனர். உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 56,100+ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2014 முதல் புதிதாக 7 ஐஐடிக்கள், 7 ஐஐஎம்கள், 157 மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
» உ.பி - லக்னோ நீதிமன்றத்தில் பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொலை
» சீரமைப்புக்குப் பின் ஷாலிமாரில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டது கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
விளையாட்டுப் போட்டிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பெற்றுள்ளனர். 2,759 வீரர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. 733 விளையாட்டு மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 266 விளையாட்டு அகாடமிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் விளையாட்டுத்துறை திட்டங்களுக்காக ரூ.2,791 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" உள்ளிட்ட தகவல்களை அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள்தான் நாட்டின் வலிமை என தெரிவித்துள்ள அமித் ஷா, இளைஞர் மேம்பாட்டிற்காக புதிய கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அமைப்புகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் ஆகியவற்றை அமைப்பதில் பிரதமர் மோடி அரசு கடந்த 9 ஆண்டுகளில் முக்கிய கவனம் செலுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், ஒவ்வொரு துறையிலும் இளைஞர்கள் எழுச்சி பெற்றுள்ளதாகவும், புதிய மைல்கற்களை ஒவ்வொரு துறையிலும் உருவாக்கி வருவதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார். புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கான சூழல் கொண்ட நாடுகளில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமித் ஷா, இதன் காரணமாகவே நாட்டில் 100 யூனிகான் நிறுவனங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இவை வேலைவாய்ப்பை உண்டுபண்ணி வருவதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.