ட்விட்டரின் புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ இன்று பொறுப்பேற்பு?

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ இன்று பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் ட்விட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ட்வீட் மூலம் குறிப்பிட்டுள்ளார் லிண்டா. இதை அமெரிக்க நாட்டின் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்த தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்தார். பயனர்களுக்கு சந்தா கட்டணம் தொடங்கி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது என அவரது நடவடிக்கைகள் நீண்டன. இந்தச் சூழலில் லிண்டாவை புதிய சிஇஓ என மஸ்க் அறிவித்தார். அதோடு ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக தலைமை மற்றும் சிடிஓ என தனது செயல்பாடு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மஸ்க்கின் ட்விட்டர் 2.0-வை உருவாக்க தான் உறுதியுடன் இருப்பதாகவும் லிண்டா அப்போது தெரிவித்திருந்தார். ட்விட்டரின் வணிக செயல்பாடுகளை இவர் கவனிப்பார் என தெரிகிறது.

என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிந்த ஜோ பெனாரோச்சை அவர் ட்விட்டர் நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளார். இது லிண்டா மற்றும் ஜோ தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘ட்விட்டர் 2.0-வை கட்டமைப்பதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்’ என ஜோ தெரிவித்துள்ளார். அவரும் இன்றைய நாளில் ட்விட்டர் நிறுவனத்தில் இணைகிறார்.

யார் இவர்? - லிண்டா யாக்காரினோ 10 ஆண்டுகளுக்கும் மேலாக என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். நிறுவனத்தின் விளம்பர செயல்திறனை அளவிடுவதற்கான ஒரு தொழில்துறை வழக்கறிஞராக அவர் இயங்கினார். மேலும் அந்நிறுவனத்தின் விளம்பர விற்பனையின் தலைவராகவும் இருந்துள்ளார். டர்னர் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் சுமார் 19 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE