இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு எப்போது? - அன்புமணி காட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மீனவர்கள் மீது ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலில், ”வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே 10 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்துள்ளனர்; அவர்களின் வலைகள் அறுத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன; பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும். கடந்த 10ம் தேதி நள்ளிரவிலும் கச்சத்தீவு பகுதியில் இதே போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 18ம் தேதி கைது செய்யப்பட்ட 42 மீனவர்களும், 20ம் தேதி கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் இலங்கை அரசால் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இன்னொருபுறம் நடுக்கடலில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்கிறது. இவற்றுக்கு முடிவு எப்போது?

ஒருபுறம் இலங்கைக்கு இந்தியா நிதியுதவியும், ராணுவ உதவிகளையும் வாரி வழங்குகிறது. மறுபுறம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரை கொடுமைப்படுத்துகிறது. இது என்ன நியாயம்? மீனவர்கள் மீதான அத்துமீறலை கைவிடும்படி இலங்கையை இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE