புதுச்சேரியில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (டிச.16) வெளியிட்ட தகவலில், "புதுச்சேரி மாநிலத்தில் 2,501 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 15 பேர், காரைக்காலில் 6 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 24 பேருக்கு (0.96 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 35 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 151 பேரும் என மொத்தமாக 186 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் புதுச்சேரி மூலகுளத்தைச் சேர்ந்த 84 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,879 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. புதிதாக 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 220 (98.40 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 13 லட்சத்து 26 ஆயிரத்து 574 (2 டோஸ் உட்பட) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE