மழை பாதிப்பு: 2000 பேருக்கு உணவு வழங்கிய துரை வைகோ

சென்னையில் மழையால் பாதித்த 2000 பேருக்கு மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ மதிய உணவு வழங்கினார்.

வடகிழக்குப் பருவமழை காரணமாகக் கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னையில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பலர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின், பல்வேறு கட்சிப் பிரதிநிதிகள் பலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

தற்போது மழை பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் சூழ்நிலையில், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் பெருமழையால், சென்னையில் பாதிப்புக்கு உள்ளான அண்ணா நகர் - எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்த 2000 பேருக்கு மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ இன்று மதியம் உணவு வழங்கினார்.

இந்நிகழ்வின்போது அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், தென்சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.கழககுமார், அண்ணா நகர் பகுதிச் செயலாளர் இராம.அழகேசன், மகளிர் அணி மாநிலத் துணைச் செயலாளர் மல்லிகா தயாளன், திமுக பகுதிச் செயலாளர் ச.பரமசிவம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE