தீபாவளி பரிசுக் கூப்பன்; கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம்: புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

By செ. ஞானபிரகாஷ்

கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரமும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும் தீபாவளி பரிசுக் கூப்பனாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுவை மாநிலத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். இந்த ஆண்டு இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக 18 வயதைக் கடந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வீதம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.

இதன்படி புதுவை மாநிலத்தில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 412 பேருக்கு ரூ.6 கோடியே 22 லட்சத்து 6 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று முதல் வரவு வைக்கப்படும்.

அதேபோல் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் தீபாவளி பரிசுக் கூப்பனாக வழங்கப்படுகிறது. கட்டிடத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.3 ஆயிரம் தீபாவளி பரிசுக் கூப்பனாக வழங்கப்படும்".

இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE