பட்டாசு குடோனில் பதுக்கிய ரூ.18 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.18 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருட்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ஈஞ்சார் விலக்கு அருகில் உள்ள ஒரு பட்டாசு குடோனில் பல லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி. மனோகருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, அவர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் அப்பகுதியில் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மற்றும் கார்த்திக் என்பவர்கள் ஈஞ்சார் விளக்கு அருகில் சரவண மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோனில் குட்கா புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது பட்டாசு குடோனில் பட்டாசுப் பெட்டிகளுடன் 55 மூட்டைகளில் ரூ.18 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதையடுத்து நவநீத கிருஷ்ணன், கார்த்திக் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பொருட்களுடன், பொலிரோ ஜீப் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE