சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கத் தயாராகும் கனடா

By செய்திப்பிரிவு

கனடாவில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட உள்ளனர்.

பொருளாதாரத்தையும், சுற்றுலாத் துறையையும் கருத்தில் கொண்டு, கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளை உலக நாடுகள் அனுமதித்து வருகின்றன. அந்த வகையில் கனடாவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கனடா அரசு விடுத்துள்ள அறிவிப்பில், “கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள். முதல் கட்டமாக ஆகஸ்ட் மாதம் முதல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கனடா வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. மற்றவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற சான்றிதழைக் கனடாவில் நுழைவதற்கு முன்னர் வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE