காரைக்குடியில் ஆடித் தள்ளுபடிக்காகக் குவிந்த வாடிக்கையாளர்கள்: ஜவுளிக் கடையைப் பூட்டிய நகராட்சி அதிகாரிகள்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆடித் தள்ளுபடி அறிவிப்பால் சமூக இடைவெளியின்றி வாடிக்கையாளர்கள் குவிந்ததால் ஜவுளிக் கடையை நகராட்சி அதிகாரிகள் பூட்டிச் சென்றனர்.

ஆடி மாதம் என்றாலே ஜவுளிக் கடைகளில் சிறப்புத் தள்ளுபடி அறிவிப்பது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவலால் ஜவுளிக் கடைகள் திறக்கவில்லை. இதனால் ஆடித் தள்ளுபடியும் இல்லாமல் போனது. ஆனால், தற்போது கரோனா தொற்று குறைந்த நிலையில் ஜவுளிக் கடைகளைச் சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து இன்று ஆடிப் பிறப்பையொட்டி காரைக்குடி மேனமேன வீதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் பட்டுப் புடவைகளுக்கு 50 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இதனால் கடை திறப்பதற்கு முன்பே அதிகாலை 6 மணியில் இருந்து கடை முன்பாக ஏராளமானோர் காத்திருந்தனர். கடை திறந்ததும் உடல் வெப்பப் பரிசோதனை செய்து, முகக்கவசம் அணிந்தவர்களை மட்டுமே அனுமதித்தனர்.

ஆனால், சில மணி நேரத்தில் கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காமல் சமூக இடைவெளியின்றி வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் கடையில் இருந்த வாடிக்கையாளர்களை போலீஸார் உதவியுடன் வெளியேற்றினர். பிறகு கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி ஜவுளிக் கடையைப் பூட்டி சாவியை எடுத்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE