அரியலூர் கார் விபத்தில் தந்தை, மகள்கள், பேத்தி பலி: குழந்தைகள் உட்பட 4 பேர் காயம்

By பெ.பாரதி

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே சாலையோரப் புளிய மரத்தில் இன்று (ஜூன் 18) கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

கீழப்பழுவூர் அடுத்த வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (60). இவர் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், வெற்றியூர் கிராமத்தில் தான் கட்டிவரும் வீட்டைப் பார்க்க, இன்று காரில் ராமமூர்த்தி, தனது மனைவி, 2 மகள்கள், 3 பேரக் குழந்தைகளுடன் வந்தார்.

கீழப்பழுவூர் அடுத்த சாத்தமங்கலம் அருகே கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக, சாலையோரப் புளிய மரத்தில் மோதியது. இதில் ராமமூர்த்தி, மூத்த மகள் நாகவள்ளி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இளைய மகள் நாகலட்சுமி (22) உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி நாகலட்சுமி மகள் ரித்திகா (1) உயிரிழந்தார்.

2 குழந்தைகள், ஓட்டுநர், ராமமூர்த்தி மனைவி மோகனா (55) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE