தொடர் மழையால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு: கோவை குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சிறுவாணி, வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சிறுவாணி அணை மற்றும் நொய்யலைச் சார்ந்துள்ள நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதுகுறித்துப் பொதுப்பணித்துறையினர் கூறும்போது, "நொய்யல் ஆற்று நீர் நேற்று இரவு சித்திரைச்சாவடி தடுப்பணையைக் கடந்தது. சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால் மூலம் 9 குளங்கள் பயன்பெறுகின்றன. தற்போது புதுக்குளம், கொளராம்பதி குளங்களுக்குத் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

மற்றொரு புறம், மாதம்பட்டி அருகேயுள்ள தடுப்பணையிலிருந்து குனியமுத்தூர் வாய்க்கால் மூலம் கங்கநாராயண சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை, பேரூர் பெரியகுளம் ஆகிய நீர்நிலைகளுக்கு மதகுகள் வழியாகத் தண்ணீர் திருப்பிவிடப்பட்டுள்ளது. குறிச்சி குளத்தில் ஏற்கெனவே தண்ணீர் உள்ள நிலையில், அதன் எஞ்சியுள்ள கொள்ளளவை நிரப்பும் நோக்கில் அந்தக் குளத்துக்குத் தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

கோவை செம்மேட்டில் உள்ள உக்குளத்தின் கரை உடைப்பால் இன்று நீரில் மூழ்கிய வெங்காயப் பயிர்கள்.

தொடர் மழையால் கோவை செம்மேட்டில் உள்ள உக்குளத்தின் ஒருபுறக் கரையில் இன்று (ஜூன் 17) உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்த சுமார் 20 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில், அங்கு பயிரிடப்பட்டிருந்த வெங்காயம், கரும்பு ஆகிய பயிர்கள் சேதமடைந்தன. பின்னர், அப்பகுதி விவசாயிகள் இணைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் உடைப்பை அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE