ஒரு மூடை நிலக்கடலை ரூ.1,800-க்கு விற்பனை: கொள்முதல் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலை

By இ.ஜெகநாதன்

சிவகங்கை பகுதியில் ஒரு மூடை நிலக்கடலையை வியாபாரிகள் ரூ.1,800-க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோயில், கல்லல், சிங்கம்புணரி, எஸ்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயிரிட்டிருந்த நிலையில் தற்போது நிலக்கடலை அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இந்தாண்டு நல்ல விளைச்சல் கண்டுள்ளநிலையில், கரோனா சூழ்நிலையால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.

நாற்பது கிலோ கொண்ட மூடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.2,400 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் இந்தாண்டு ரூ.1,800-க்கே வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சிவகங்கை அருகே சாத்தனியில் காய வைக்கப்பட்டுள்ள நிலக்கடலை.

இதுகுறித்து சாத்தனி விவசாயி வீரபத்திரபிரபு கூறுகையில், ‘கிணற்று பாசனம் மூலம் 4 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளோம். ஏக்கருக்கு ரூ.35 ஆயிரத்திற்கு மேல் செலவழித்துள்ளோம். ஏக்கருக்கு 25 மூடைகள் வரை மகசூல் கிடைத்துள்ளது. ஆனாலும் விலை கிடைக்காததால் பறிப்புக் கூலி எங்களுக்கு நஷ்டமாகியுள்ளது.

இதனால் நல்ல விலை கிடைக்கும்போது விற்பதற்காக, சிலர் நிலக்கடலையை விற்காமல் வீடுகளிலேயே தேக்கி வைத்துள்ளனர், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE