அலட்சியம் கூடாது; மக்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

மக்கள் அலட்சியப்படுத்தாமல் கட்டாயமாக தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டுமென புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஜூன் 3)வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது, ‘‘கரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

தாங்களாகவே தங்களை பாதுகாத்துக்கொண்டால் ஒழிய கரோனா தொற்றில் இருந்து தப்பிப்பது மிகவும் சிரமமாகும். அதலால் மருத்துவர்கள் கூறுகின்ற ஆலோசனைப்படி நிச்சயமாக ஒவ்வொருவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

அதில் எந்தவித அச்சமும் இல்லை என்பதை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். கட்டாயமாக ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு இருந்தால் கரோனா தொற்றில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். தேவையான தடுப்பூசிகள் நம் சுகாதாரத்துறையிடம் இருக்கிறது.

எனவே மக்கள் அலட்சியப்படுத்தாமல் கட்டாயமாக தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’’ இவ்வாறு ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE