டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கும் விழா

By செய்திப்பிரிவு

சென்னை:

டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கும் விழா நாளை மறுநாள் (ஆக. 23 - வெள்ளிக்கிழமை) மாலை மதுரையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வை இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் ஆற்றிவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த மூன்றாண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான இவ்விருதுகள் வழங்கும் விழா சென்னை மண்டலத்தில் கடந்த திங்களன்று நடைபெற்றது. மதுரை, கோவை என இரு மண்டலங்களில் நடைபெறவுள்ளது.

மதுரையில் நாளை மறுநாள் (ஆக. 23, வெள்ளி) மாலை 4 மணிக்கு மதுரை காமராசர் சாலையிலுள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில் ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ரெக்கிட் நிறுவன வெளிவிவகாரங்கள் மற்றும் கூட்டாண்மை இயக்குநர் ரவி பட்னாகர் பங்கேற்று விருதுகளை வழங்கவுள்ளார். இவ்விழாவில், தமிழ்நாடு ஐஎம்ஏ தலைவர் டாக்டர் கே.எம்.அபுல் ஹசன், ஐஎம்ஏ மதிப்புறு மாநில செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு, மதிப்புறு நிதி செயலாளர் டாக்டர் எஸ்.கெளரி சங்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இவ்விழாவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த 70 மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி, கவுரவிக்கப்படவுள்ளார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE