டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கும் விழா

By செய்திப்பிரிவு

சென்னை: டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கும் விழா நாளை மறுநாள் (ஆக. 19 - திங்கள்கிழமை) மாலை சென்னையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வை இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.


‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் ஆற்றிவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த மூன்றாண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான இவ்விருதுகள் வழங்கும் விழா சென்னை, மதுரை, கோவை என மூன்று மண்டலங்களில் நடைபெறவுள்ளது.

சென்னையில் நாளை மறுநாள் (ஆக. 19, திங்கள்) மாலை 5 மணிக்கு ஆழ்வார்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையிலுள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று விருதுகளை வழங்கவுள்ளார். இவ்விழாவில், தமிழ்நாடு ஐஎம்ஏ தலைவர் டாக்டர் கே.எம்.அபுல் ஹசன், ஐஎம்ஏ மதிப்புறு மாநில செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு, மதிப்புறு நிதி செயலாளர் டாக்டர் எஸ்.கெளரி சங்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இவ்விழாவில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபரி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 15 மாவட்டங்களைச் சேர்ந்த 70 மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி, கவுரவிக்கப்படவுள்ளார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE