மூத்த எழுத்தாளர் அமுதவன் காலமானார்

By இரா.வினோத்

பெங்களூருவைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான அமுதவன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. நடிகர் சிவகுமார், கவிஞர் அறிவுமதி உள்ளிட்டோர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளர் மெல்கியோ (எ) அமுதவன் (71) தனது மனைவி மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ராமமூர்த்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார்.

இதையடுத்து, அமுவனின் உடல் அஞ்சலிக்காக அவரது 'ஆனந்தம்' இல்லத்தில் வைக்கப்பட்டது. பெங்களூருவை சேர்ந்த தமிழ் அமைப்பினரும், இந்திய தொலைப்பேசி தொழிற்சாலையின் தொழிற்சங்கத்தினரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலையில் கல்பள்ளி கல்லறையில் அமுதவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த அமுதவனின் குடும்பத்தினருக்கு நடிகர் சிவகுமார், கவிஞர் அறிவுமதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தடம் பதித்த பத்திரிகையாளர்: 1980-களில் இந்திய தொலைப்பேசி தொழிற்சாலையில் பணியாற்றிய போது அமுதவனுக்கு எழுத்துலகின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பத்திரிகையாளர் சாவி மூலம் இதழியல் துறைக்குள் நுழைந்த அமுதவன் கல்கி, ஆனந்த விகடன், குமுதம், பிலிமாலயா உள்ளிட்ட இதழ்களில் சுயாதீன பத்திரிகையாளராக பணியாற்றினார். தமிழ் திரைப்படங்கள் குறித்தும், கர்நாடக அரசியல் குறித்தும் ஏராளமான கட்டுரைகளை எழுதினார்.

இது தவிர சிறுகதை, தொடர்கதை, கவிதை, நாவல் ஆகியவற்றையும் எழுதியுள்ளார். சாவி இதழில் அமுதவன் எழுதிய 'கங்கையெல்லாம் கோலமிட்டு' தொடர்கதையும், குமுதத்தில் வெளிவந்த 'விபத்து' குறுநாவலும் இலக்கிய வட்டார‌த்தில் பரவலான கவனத்தை பெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக மாற்று மருத்துவமான 'ரெய்கி' சிகிச்சையிலும் ஈடுபட்டு வந்தார். ரெய்கி பற்றி 'நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி','சர்க்கரை நோய் - பயம் வேண்டாம்' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.ஞானப்பீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன், மறைந்த எழுத்தாளர் சுஜாதா, மூத்த நடிகர் சிவகுமார் உள்ளிட்டோருக்கு அமுதவன் மிக நெருக்கமானவராக இருந்தது குறிப்பிடத்தக்க‌து.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE