பரோட்டாவின் வரலாறு 

By உஸ்மான்

என்ன பரோட்டாவுக்கெல்லாம் வரலாறா என்று யாரும் சண்டைக்கு வரவேண்டாம். வித்தியாசமான பரோட்டா சுவைகளை போலவே வித்தியாசமான வரலாறும் பரோட்டாவுக்கு உண்டு.

இந்தியா , பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ்,மாலத்தீவுகள் நேபாளம், இந்தோனேசிய என பலநாட்டு மக்களை வசீகரித்து உணவு பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பரோட்டா சினிமா கதாநாயகன் போல பல அவதாரங்கள் எடுக்கும் வல்லமை கொண்டது

ஆலூ பரோட்டா, கொத்துப் பரோட்டா, மெலிதான வீச்சுப் பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிய மலபார் பரோட்டா, சிலோன் பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டைப் பரோட்டா, காலிஃப்ளவர் பரோட்டா என்று பல விதமான பெயர்களில் பல்வேறு சுவைகளில் உருவாகும் புரோட்டாவின் தாயகம் இலங்கை என்று சிலர் சொன்னாலும் அது இந்திய துணைக் கண்டத்தில் இருந்த இப்போதைய பெஷாவர் தான் புரோட்டாவின் தாய்மண் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் புரோட்டா மேல் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக சொல்கிறார்கள்.

ஆரம்பத்தில் கோதுமை மாவில் நிறைய நெய் விட்டு செய்யப்பட்ட புரோட்டா இரண்டாவது உலகப்போரில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது மைதாவுக்கு மாறியது. அதோடு நெய்யையும் விட்டுவிட்டு எண்ணெய் ஊற்றி தயாரிக்கபட்டது.

எளிய மக்களின் உணவாக கருதப் படும் பரோட்டா ஜீரணமாக வெகுநேரம் பிடிப்பதால் உழைக்கும் வர்க்கத்தின் மக்கள் பரோட்டாவை விரும்பி உண்டனர்.அதிலும் சால்னா குருமா இருந்தால் சொல்ல வேண்டியதில்லை.

சரி நீ எல்லா கோடுகளையும் அழி நா முதல்ல இருந்தே ஆரம்பிக்கிறேன் என்று புரோட்டா தின்னும் நடிகர் சூரியின் காமெடியை யாரும் மறக்க முடியாது.

இவ்வளவு புகழ் பெற்ற புரோட்டாவுக்கு இப்போது சோதனை ஜிஎஸ்டி ரூபத்தில் வந்துள்ளது.

மைதா மாவில் தயாரிக்கப்படும் பிரட் ரொட்டி போன்ற உணவு வகைகளுக்கு 5% சதவிகிதம் ஜிஎஸ்டி வரி போட்டுள்ள மத்திய அரசு அதே மைதா மாவில் தயாரிக்கப்படும் புரோட்டாவுக்கு 18% சதவிகிதம் ஜிஎஸ்டி வரி போட்டுள்ளது.

இதற்கு பலமான எதிர்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே சிறுபான்மை மக்களும் , பிற்படுத்தப்பட்ட மக்களும் சாப்பிடும் இறைச்சி, கோழி, மீன் கடைகள் மீது திட்டமிடப்பட்ட அவதூறு பிரச்சாரம் செய்யப்பட்டு அந்த தொழில் செய்பவர்கள் பெரும் நட்டத்தை சந்தித்து பல கடைகள் மூடும் நிலையில் இருக்கும் போது அவர்களால் விரும்பி உண்ணப்படும் பரோட்டாவுக்கு எதிரான இந்த நடவடிக்கை அரசியலில் மதம் கலந்து விட்டதோ என்ற அச்சத்தையே பலருக்கும் உண்டாக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE