எழுத்தாளர் யூமா வாசுகி, தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, சிறுகதை, நாவல், சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு எனப் பல வகைகளில் பங்களிப்பு நல்கியவர். இவரது பங்களிப்புகள் குறித்த ஒரு நாள் நிகழ்வு இன்று (04.08.24) காலை 9.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர்கள் பெருமாள்முருகன், விஷ்ணுபுரம் சரவணன், கார்த்திகைப் பாண்டியன், ஸ்டாலின் சரவணன், செல்வ புவியரசன், சாலை செல்வம், கவின் மலர், கதிர் பாரதி, சுரேஷ்மான்யா, இரா.காமராசு உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். சிம்ளி கலை இலக்கியப் புலம், சித்தன்னவாசல் இலக்கியச் சந்திப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கின்றன. யூமா, பால சாகித்ய விருது பெற்றதை ஒட்டி இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுகிறது. தொடர்புக்கு: 9842505065
ஈரோடு புத்தகத் திருவிழா
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை ஒருங்கிணைக்கும் ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கி (04.08.24) ஆகஸ்ட் 15 வரை நடைபெறவுள்ளது. இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகமும் (அரங்கு எண்: 171, 172) கலந்துகொண்டுள்ளது.
ஆர்.பாலகிருஷ்ணன் நூல் அறிமுக விழா
ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘இரண்டாம் சுற்று’ நூல் அறிமுக விழா, வரும் வெள்ளிக்கிழமை (09.08.24) மாலை 5.30 மணிக்கு திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ப்ளாசமில் நடைபெறவுள்ளது. கவிஞர் நந்தலாலா, நூல் குறித்துச் சிறப்புரை ஆற்றுகிறார். ‘கால் தந்த கலம்’ என்கிற தலைப்பில் ஆர்.பாலகிருஷ்ணனும் உரை நிகழ்த்தவுள்ளார். திருச்சி களம் அமைப்பு நிகழ்வை ஒருங்கிணைக்கிறது.
தினவு வெளியீட்டு விழா
ரஷ்ய எழுத்தாளர்களில் தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய்க்கு நிகராக வைத்துப் பார்க்கப்பட்ட எழுத்தாளர் இவான் கோஞ்சரோவ். இவரது நூலான ‘ஒப்பலமோவ்’ தமிழ் மொழிபெயர்ப்பைத் தினவு பதிப்பகம் வெளியிடுகிறது. மஹாரதி மொழிபெயர்த்துள்ளார். இதன் வெளியீட்டு நிகழ்வு இன்று (04.08.24) மாலை 5 மணி அளவில் கே.கே.நகர் கலப்பை பதிப்பக விற்பனை மையத்தில் நடைபெறவுள்ளது. இயக்குநர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் என்.ராம், வே.ராமசாமி, ஆகாசமூர்த்தி, பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கிறார்கள். தொடர்புக்கு: 75502 35665.