திண்ணை: போபால் பேரழிவு குறித்த நாவல்

By செய்திப்பிரிவு

உலக அளவில் நடந்த பேரழிவுகளில் ஒன்று போபால் விஷவாயுக் கசிவு சம்பவம். இதில் 3,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 2024 இந்தப் பேரழிவின் 40ஆவது ஆண்டு. அதை நினைவுபடுத்தும் விதத்தில் ‘தி பிரிஸனர் ஆஃப் போபால்’ (The Prisoner of Bhopal) என்கிற நாவலைப் பிரபல வடிவமைப்பாளரான டிம் வாக்கர் எழுதியிருக்கிறார். ஆமில் என்கிற 10 வயதுச் சிறுவனை மையக் கதாபாத்திரமாகக் கொண்ட இந்த நாவல், பெருநிறுவனத்தின் பொறுப்பின்மையைச் சுட்டிக் காட்டுகிறது. தொழில்துறைப் பேரழிவுகள் ஏற்படுத்தும் நீண்டகால தாக்கங்களைச் சுற்றுச்சூழல் பின்னணியில் இந்தக் கதை சொல்கிறது.

க.நா.சு.வின் கவிதை இயல் கட்டுரை

தமிழில் இன்று நிலைபெற்றுள்ள புதுக்கவிதை வடிவத்தை பாரதியார் தொடங்கிவைத்தார் எனலாம். ஆனால், அதற்குப் புதுக்கவிதை எனப் பெயரிட்டு, அதன் லட்சணங்களை மதிப்பிட்டு எழுதியவர் எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியம். இந்த நவீனக் கவிதை இயல் குறித்து க.நா.சு. எழுதிய கட்டுரை ஒன்று 1959இல் ‘சரஸ்வதி’ ஆண்டு மலரில் வெளியாகி விவாதிக்கப்பட்டது. அந்தக் கட்டுரை www.kavithaigal.in இணைய இதழில் மீள் பிரசுரம் கண்டுள்ளது. ‘தமிழில்‌ புதுக்‌கவிதையின்‌ அவசியத்தைப்‌ பற்றிய வரையில்‌ எனக்குச்‌ சந்தேகமில்லை. மரபுக்‌ கவிதை செத்துவிட்டது. (அல்லது செத்துக்‌கொண்டிருக்கிறது) புதுக்‌கவிதை தோன்றியே தீரும்‌’ என இந்தக் கட்டுரையில் புதுக்கவிதையின் வீச்சைத் தீர்க்கமாக மதிப்பிட்டுள்ளார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE