மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.5 - 11

By Guest Author

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதைக் கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். தொழிலில் ஒரு நல்ல காலகட்டத்தை நீங்கள் உணர முடியும். பண வரவு சிறப்பாக இருக்கும். திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம்.

உத்யோகஸ்தர்களுக்கு மிகச்சிறந்த ஏற்றமும், மாற்றமும் உண்டாகும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டியதிருக்கும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த இழுபறியான சூழல்மாறும். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும். மதிப்பெண்கள் சீராக கிடைக்கும் | பரிகாரம்: முருகனை வணங்க மனதில் நிம்மதி இருக்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் மிகவும் கவனமுடனும், சிரத்தையுடனும் இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயம் பேசுவதாக இருந்தாலும் சரி, செய்வதாக இருந்தாலும் சரி, கவனம் தேவை. மனக்கலக்கம், வீண் பயம் ஏற்படலாம். குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு எந்த விதமான குறைவும் இருக்காது. பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

உத்யோகஸ்தர்கள் வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். தொழில் நன்றாக இருக்கும். எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். பண வரவு இருக்கும்.

பங்குதாரர்களிடம் யதார்த்த நிலையை கடைபிடிக்கவும். எந்தவொரு விஷயத்திலும் ஆராய்ந்து முடிவெடுக்கவும். பெண்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். புரியாத பாடங்கள் புரியும். ஆசிரியர் உதவியை நாடுவது நல்லது | பரிகாரம்: மஹாலட்சுமியை வணங்க குழப்பங்கள் தீரும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். மனதில் இருந்த வீண் பயம் அகலும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகிக்கொள்வார்கள். சகோதர சகோதரிகள் வகையில் எந்த ஒரு முடிவும் எடுக்கும் முன் ஆலோசனை செய்வது நல்லது.

எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. குடும்பத்தில் நீடித்து வந்த குழப்பங்கள் அகலும். தொழில் சார்ந்த குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. வருமானம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.

பெண்கள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாக்குவாதங்கள் ஏற்படலாம். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் இருந்த சுணக்க நிலை மாறும். பெற்றோர், ஆசிரியர் சொல்படி நடப்பது நல்லது | பரிகாரம்: விஷ்ணுவை வழிபட மனதில் தெளிவு பிறக்கும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE