மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 13 - 19 

By Guest Author

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 13-06-2024 அன்று சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-06-2024 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு- தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 13-06-2024 அன்று சுக்கிர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-06-2024 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்பம் ஒன்று நிகழும். அறிவு திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். மற்றவர்களுக்கு உங்கள் மூலம் அதிக நன்மைகள் நடக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் குறையும்.

பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சினை வராமல் தடுக்கும்.

பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், சூரியன், குரு - சுக ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 13-06-2024 அன்று சுக்கிர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-06-2024 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பொருள் சேர்க்கை உண்டாகும். அனைத்து விதமான நலங்களையும் பெறப் போகிறீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும்.

பிள்ளைகள் வழியில் நற்பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் கூடும். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம்.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. அரசியல்வாதிகள் எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: தினம்தோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வருவதன் மூலம் நன்மைகள் ஏற்படும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE