மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஏப்.27 - மே 3

By Guest Author

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எடுத்த காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் பின்னர் வேகம் பிடிக்கும். வீண் மனசஞ்சலம் உண்டாகும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பிடிக்க கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளை தாமதம் இல்லாமல் முடிக்க பாடுபடுவார்கள்.

பணவரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குழந்தைகளால் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நினைத்ததை சாதிக்கும் மனவலிமை உண்டாகும்.

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். வீண் கவலை ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பணிகளை தாமதம் இல்லாமல் முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி நவகிரகத்தில் செவ்வாயை வழிபட துன்பங்கள் நீங்கும். இன்பங்கள் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சீரிஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் செல்வாக்கு உயரும். வருமானம் கூடும். காரியத் தடைகள் நீங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்க தூண்டும். கடன்தொல்லை குறையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்த சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் முடிவில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் எண்ணப்படி பொருட்கள் வாங்க நேரும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள்.

உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். தடைநீங்கி பணிகள் வேகம் பிடிக்கும். செல்வாக்கு கூடும். மாணவர்களுக்கு பல தடைகளையும் தாண்டி கல்வியை கற்று வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்கவும், சுக்கிர பகவானுக்கு மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கினால் மனது மகிழும்படியான அளவில் காரியங்கள் நடக்கும். கடன் பிரச்சினை தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

மிதுனம் (மிருக சீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் புதன்(வ), ராகு, சூர்யன், குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மனோதைரியம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. நிதானமான போக்கே காணப்படும். பணவரத்து தாமதப்படும்.

தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நினைப்பதை தள்ளிபோடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலை பளுவால் மனசலிப்பும் உண்டாகும். வார இறுதியில் இந்தநிலை மாறி நன்மை ஏற்படும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் மாறி சகஜ நிலை ஏற்படும்.

குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பயணங்கள் தாமதப்படும். பெண்களுக்கு வீண் அலைச்சலும், காரியதாமதமும் ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை தேவை. நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்: மதுரை மீனாட்சியையும் சொக்கநாதரையும் வணங்கி வருவதுடன் நவகிரகத்தில் புதனுக்கு பச்சை பயிறு சுண்டல் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்க வாழ்க்கை வளம் பெறும். மனதில் நிம்மதி ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் சுப பலன்கள் உண்டாகும். எடுத்த காரியம் தாமதத்திற்கு பிறகு சாதகமான பலன் தரும். மனோதிடத்தை தரும். அவசரப்பட்டு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் தாமதமாக நடைபெறும். புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

கணவன், மனைவிக்கிடையே பந்தபாசங்கள் கூடும். வாழ்க்கை துணையின் மூலம் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு அவசரப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். மாணவர்களுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் கல்வியில் மேன்மை உண்டாகும்.

பரிகாரம்: பூஜை செய்து சந்திரனை வணங்கி தயிர் சாதத்தை ஏழைகளுக்கு விநியோகம் செய்ய குழப்பங்கள் நீங்கி மனதெளிவு உண்டா கும். பொருள் சேர்க்கை இருக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உடல் ஆரோக்யம் பெறும். மனதில் தைரியமும், உற்சாகமும் கூடும் சாதகமான பலன்கள் இருக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவுகளை உண்பீர்கள். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி ஓரளவு நல்ல ஒற்றுமையுடன் வாழ நேரிடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

பெண்களுக்கு எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மனோதிடம் கூடும். உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: நவகிரகத்தில் சூரியனை வணங்கி கோதுமையால் செய்யப்பட்ட உணவு பொருளை நைவேதியம் செய்து ஏழைகளுக்கு வழங்க காரிய தடை நீங்கும். எதிலும் வெற்றி கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த வேலைகள் வேகமாக நடந்து முடியும். இதுவரை இருந்த அலைச்சல்களும் குறையும். செலவு அதிகரிக்கும் அதே நேரத்தில் வரவும் இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். தொழில் விருத்தியடையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சகபணியாளர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும்.

குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்தே செய்து முடிக்க வேண்டிவரும். எதிர்ப்புகள் குறையும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். பாடங்கள் படிப்பதில் வேகம் இருக்கும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சினை குறையும்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். உடல் ஆரோக்யம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அலைச்சல் இருக்கும். பணவரவும் இருப்பதுடன் பயணங்கள் செல்லவும் நேரலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவார்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதிருப்தி காண்பார்கள். அலுவலகம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.


பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். அதனால் மன மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரும். பயணங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபட்டு படிப்பீர்கள். கல்வி தொடர்பான பயணங்கள் ஏற்படும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கடன் பிரச்சினை சொத்து தகராறு தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லா வகையிலும் நற்பலன்கள் உண்டாகும். வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகலாம். மனதுக்கு பிடித்தமான காரியங்களை செய்து மனநிறைவடைவீர்கள். உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர் களுக்கு உத்தியோகம் கிடைக்கும்.

மனதில் இருந்த கவலைகள் நீங்கி அலுவலக வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிர்பாராத வளர்ச்சி காண்பார்கள். மனதில் தைரியம் கூடும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். குழந்தைகளால் பெருமை பெறுவீர்கள். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும். மாணவர்களுக்கு உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். கல்வியில் வெற்றி அடைய மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

பரிகாரம்: கார்த்திகை தினத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வணங்க பிரச்சினைகள் தீரும். மனோதைரியம் கூடும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எண்ணிய காரியம் ஈடேறும். காரிய அனுகூலம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். எப்படிப்பட்ட சிக்கல்களையும் தீர்க்கும் வல்லமை ஏற்படும். அடுத்தவருக்கு உதவி செய்து அதன் மூலம் மதிப்பு உயரும். அவசரப்படாமல் எதையும் செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கைநழுவிச் சென்ற ஆர்டர்கள் மீண்டும் கிடைக்க பெறலாம். முயற்சிகள் சாதகமான பலனை தரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கட்டளை இடும் பதவிகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கி டையே சுமூக உறவு இருக்கும்.
உறவினர்கள் நண்பர்கள் உங்களை ஆலோசனை கேட்டு சில காரியங்கள் செய்து நல்ல பலன் அடைவார்கள். பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சக மாணவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு கூடும்.

பரிகாரம்: திருவொற்றியூரில் உள்ள தட்சிணாமூர்த்தியை நெய்தீபம் ஏற்றி வணங்க பணவரத்து கூடும். காரிய தடைகள் விலகும். தொழில் சிறக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதிலும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அடுத்தவரை நம்பி எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். நீண்ட நாட்களாக நடந்து முடியாமல் இருந்த ஒரு வேலை நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையின் உடல்நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது.

கடன் விவகாரங்கள் காலதாமதமாகும். வர வேண்டிய பணம் தாமதப்படலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. ஆனால் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கவனமாக பணி செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களையும், வாழ்க்கை துணையையும் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை நடந்து முடியும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வெண்ணைசாற்றி வணங்கி வர துணிச்சல் அதிகரிக்கும். காரியதடைகள் நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து இருக்கும். எந்த விஷயத்திலும் உடனடி தீர்வு காண முடியாத இழுபறிநிலை காணப்படும். ஆனால் இந்தநிலை மாறி நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். மனதில் திடீர் கவலை தோன்றும். சகோதரர் வழியில் மனவருத்தம் தரக்கூடிய சம்பவம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்தும் நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. பிள்ளைகளிடம் எதையும் பக்குவமாக சொல்வது நன்மையை தரும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.

பெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம் எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்கு சக மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் பெருமாளை தீபம் ஏற்றி வணங்கி சனீஸ்வர பகவானையும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர கடன் பிரச்சினை தீரும். சிக்கலான பிரச்சினைகள் தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுகஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். புதியதொடர்புகள் உண்டாகும். பெண்கள் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சிலர் புதிய வீடு கட்டும் பணி தொடங்குவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, தேடி வரும். கனவு தொல்லை உண்டாகலாம். நீண்ட நேரம் கண் விழிக்க நேரிடும்.

தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. சகோதரர் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். திடீரென்று கவனம் தடுமாறலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின் நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும். குடும்பத்தினர் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கி டையே மகிழ்ச்சியான நிலை காணப் படும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.

நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி உண்டாகும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட தடை நீங்கி காரியம் நடக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE