குரு பெயர்ச்சி 2023 - 24 | விருச்சிகம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள் 

By Guest Author

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) பலன்கள்: அநியாயங்களை தட்டிக் கேட்பவர்களே! உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணவரவையும், வசதி வாய்ப்புகளையும் தந்த குருபகவான் ஏப்.22, 2023 முதல் மே 01, 2024 வரை ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார்.‘சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்’ என்று பழைய பாடல் கூறுகிறது. அதன்படி எதிலும் சின்ன சின்ன தடைகள் இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்ற போராட வேண்டி வரும். சகட குருவாக இருப்பதால் கணவன் மனைவிக்குள் பிரிவு, வீண் சண்டை சச்சரவுகள், டென்ஷன், எதிர்ப்பு, உடல்நலக் குறைவுகள் என வரக் கூடும்.

மனைவி வழி உறவினர்களால் சேமிப்புகள் கரைவதுடன், மனஉளைச்சல் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை வந்துபோகும். ஒரு கடனை அடைக்க மற்றொரு இடத்தில் கடன் வாங்க வேண்டியது வரும். ஆனால் குருபார்க்க கோடி நன்மை என்பது போல் குருவின் பார்வையால் நற்பலன்களும் உண்டு. குருபகவான் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை பார்ப்பதால் பேச்சில் ஒரு நிதானம் பிறக்கும். வராமலிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். குடும்பத்துக்குள் மகிழ்ச்சி தங்கும்.

குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கவுரவப் பதவிகள் தேடி வரும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலைகள் உடனே முடியும். குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயமுண்டு. மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அரைகுறையாக நின்று போன கட்டிட பணிகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். திருமணம், கிரஹப்பிரவேசம், சீமந்தம் என்று வீடு களை கட்டும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அக்கம் பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டங்களில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், செலவினங்களும் வந்து போகும். ஆனால் விசாகம் 4-ம் பாதம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பணப் புழக்கம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைபட்ட காரியங்கள் முடிவடையும்.

ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தள்ளிப் போன திருமணம் முடியும். அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வாகனம் மாற்றுவீர்கள். மனைவி வழி உறவினர்களுடன் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும், முடிவில் சமாதானம் உண்டாகும். மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும். பழைய வீட்டை சீர் செய்வீர்கள்.

ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பணவரவு, செல்வாக்கு, நாடாளுபவர்களின் நட்பு யாவும் உண்டாகும். பழைய சொந்தங்கள் தேடி வரும்.

செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். மனைவிக்கு புது வேலை கிடைக்கும். அவரின் ஆதரவு பெருகும். மனைவி வழி சொத்துகளும் கைக்கு வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் பலிதமாகும்.

வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்க போராட வேண்டியது வரும். எந்த ஒரு அதிரடி மாற்றங்களும் வேண்டாம். எவ்வளவு அள்ளித் தந்தாலும் வேலையாட்கள் நன்றியில்லாமல் இருக்கிறார்களே என உணர்ச்சி வசப்படுவீர்கள். உங்களின் அன்பான பேச்சால் புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். அக்டோபர், பிப்ரவரி மாதங்களில் ஆதாயம் அதிகரிக்கும். இரும்பு, மருந்து, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியாத துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்கள் எடுத்தெறிந்துப் பேசினாலும் ஆத்திரப்படாதீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். மேலதிகாரியிடம் மனஸ்தாபங்கள் வெடிக்கும். அடிக்கடி விடுப்பில் செல்ல வேண்டி வரும். உங்களுக்கு எதிராகச் சிலர் குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். கணினி துறையினருக்கு வேறு நல்ல வாய்ப்புகள் அமையும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் புதிய படிப்பினைகளை தருவதுடன், நாசூக்காக நடந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் புரிந்துக் கொள்ள வைக்கும்.

பரிகாரம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரரையும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் சென்று தரிசியுங்கள். பார்வையிழந்தவர்களுக்கு உதவுங்கள். பலம் கூடும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE